டெல்லி, நவ. 20–
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, ஸ்மார்ட் போன்களின் மோகம் குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போன்களின் மோகத்தில் இருந்த மக்கள் தற்போது ஸ்மார்ட் போனின் மோகத்தை குறைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஸ்மார்ட் போனை கையில் வைத்திருக்கும் நிலையில் அடுத்து வரும் சில ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் மோகம் குறையும் என அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை பாதிப்பு
பணவீக்கம், ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக 2023ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் சந்தை வெகுவாக பாதிக்கப்படும் என டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட் போன்களின் தேவை 10 சதவீதம் குறைந்து உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா வைரசுக்கு பின்னர் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், புதிய போன்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் எனவே ஸ்மார்ட்போன்களின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.