சென்னை, ஜன.12-–
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா தி.மு.க. அறிவித்துள்ளது. அதேபோல் தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5–-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று முன்தினமே தொடங்கி விட்டது.
இந்தமுறை அந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-
எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அண்ணா தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது.
மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அராஜகம், வன்முறை என்றாலே தி.மு.க., தி.மு.க. என்றாலே அராஜகம், வன்முறை என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்து கொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலங்களில், தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
கடந்த முறை நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க.வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.
தி.மு.க.வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்பட மாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே தி.மு.க.வினரின் வாடிக்கை.
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க.வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும், பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, அண்ணா தி.மு.க. புறக்கணிக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தே.மு.தி.க.வும் போட்டியில்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அண்ணா தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-–
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்ததுபோல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை தி.மு.க. நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்கப்போகிறது.
எனவே, ஜனநாயகத்துக்கு விரோதமாக நடக்கும் இந்தத் தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.