செய்திகள்

‘‘ஸ்டார் அகாடமி’’ தேர்வுப் போட்டிகள் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் : சென்னை கலெக்டர் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஏப் 17–

சென்னை மாவட்டம் “எஸ்டிஏடி (SDAT) ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” – துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு தேர்வுப் போட்டிகள் மற்றும் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

துணை முதலமைச்சர் 2024–-2025–ம் ஆண்டிற்காண மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி வெவ்வேறு விளையாட்டுகளுடன் மாவட்ட விளையாட்டு பயிற்சிமையம் அமைத்திட அறிவிக்கப்பட்டதின் படி சென்னை மாவட்டம் துப்பாக்கி சுடுதல் விளையாட்டிற்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் பெரியமேடு, சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

இம்மையத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள 12 வயது முதல் 21 வயது வரை 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் என ஒரு மையத்திற்கு 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கிடுவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடை போன்றவைகள் வழங்கப்படும்.

பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி:

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைப்படைத்த 50 வயதுக்கு உட்பட்ட சாம்பியன் விளையாட்டு வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25 ஆயிரம்- வழங்கப்படும். இதற்குரிய விண்ணப்பத்தினை 16.4.2025 முதல் 22.4.2025 வரை அலுவக வேலை நாட்களில் மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பூங்கா அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23–ந் தேதி மாலை 5 மணி ஆகும்.

இவ்விளையாட்டிற்கு வீரர் வீராங்கனைகளுக்கான தேர்வுப் போட்டிகள் சென்னை, பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 28–ந் தேதி அன்று காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது.

தேர்வுப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்;

12 முதல் 21 வயது வரை…

12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர். தேர்வுப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். (ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ்) சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் 1.5.2025 முதல் பயிற்சி அளிக்கப்படும். இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்படவுள்ளனர்.

மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பூங்கா, சென்னை. தொலைபேசி எண். 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *