செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் ‘லிப்ட்’டை சரியாக பராமரிக்காத 2 என்ஜினீயர்கள் பணி நீக்கம்

சென்னை, டிச.2–

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை (லிப்ட்) சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்.

அமைச்சருடன், -மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர்.

மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது. இது தொடர்பாக அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி மின்தூக்கி பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் (பொதுப்பணித்துறை), இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை, 25.11.2022 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இச்சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *