கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம், ஜன. 6–
வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்ககோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சம்பளம் வழங்க கூடாது
அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றறிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்ட ரீதியாக உரிமை இல்லை என்றும், இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கியதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும் என்றும், ஆகையால் இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.