சென்னை, டிச.25–
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த ராணி வேலுநாச்சியாரின் 228–வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர். இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி. அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி எம் கழகத்தின் கொள்கைத் தலைவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.