சென்னை, ஜன. 5–
கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கி விற்கும் தொழிலில் பங்கு தருவதாக கூறி ரூ. 38 லட்சம் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டிமடம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (42), பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடன் முகைதீன் அப்துல்காதர் என்பவர் சில காலங்களாக பழகி, வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்றும், வரும் லாபத்தில் 60% பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய செந்தில், மேற்படி முகைதீன் அப்துல்காதர் என்பவருக்கு நேரடியாகவும், ஜிபே மூலமும் என பல தவணைகளாக மொத்தம் சுமார் ரூ.38 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முகைதீன் அப்துல்காதர் மேற்படி செந்திலை ஏமாற்றும் நோக்கிலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து செந்தில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முகைதீன் அப்துல் காதர் (43), அவரது மனைவி உஸ்னாராபேகம் (38), ஏஜாஸ் (37) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அப்துல்காதரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.