கதைகள் சிறுகதை செய்திகள்

வெற்று விளம்பரம்…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சில நொடிகள் கூட சில விஷயங்களை மாற்றி விடும். பெரிய பெரிய வியாபார விஷயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிகள் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது. பங்கு மார்க்கெட் ,தங்க வியாபாரத்தில் இந்த நிலைகள் ஏற்படும். ஏன் மனித உயிர்கள் கூட சில நொடிகளில் உயிர் பெற்றிருக்கின்றன. சில உயிர்கள் பிரிந்திருக்கின்றன. சில நொடிகளில் இது அத்தனையும் அடங்கி இருப்பதைப் போல காளீஸ்வரன் மேற்கொண்டிருந்த தொழிலிலும் கூட அப்படித்தான் சில நொடிகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது . அவர் தொழில் நிறுவனத்திற்கு போன் செய்தபோது, ஏழு செகண்ட் குறைவாக இருந்ததால் அவர் கைக்கு வர வேண்டிய நூறு கோடி ரூபாய் பறி போயிருந்தது .

“சார் , நான் சரியா கரெக்டா தானே உங்களுக்கு போன் பண்ணேன். ஏன் இப்பிடி மாறுச்சு”

என்று கொஞ்சம் வியப்பாகக் கேட்டார் காளீஸ்வரன்.

” இல்ல சார், உங்களுடைய போன், எங்களுக்கு லேட்டா தான் கிடைச்சது “

என்று அந்த நிறுவனத்தினர் சொல்ல

“இல்ல நான் சரியான நேரத்துக்கு தானே பேசுனேன்”

என்று மன்றாடினார் காளீஸ்வரன்.

” இல்ல காளீஸ்வரன். உங்களுக்கு முன்னாடியே அந்த ஏலத்தை ஒருத்தவங்க வாங்கிட்டாங்க. நீங்க ஒரு ஏழு செகண்டுக்கு முன்னாடி பேசி இருந்தா அந்த நூறு கோடி ரூபா பட்ஜெட் உங்களுக்கு தான் கிடைச்சிருக்கும். ஏழு செகண்ட் தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை முடக்கி வச்சிருக்கு. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?”என்று அந்த வர்த்தக நிறுவனத்தில் இருந்து எதிர் பதில் சொன்னார்கள்.

” இப்ப நான் என்ன செய்யணும் சொல்லுங்க ? “

என்று காளீஸ்வரன் கெஞ்ச

” அதெல்லாம் நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் .இந்த பிராஜெக்ட் உங்க கைய விட்டுப் போச்சுன்னு நினைச்சுக்கோங்க. இனிமே குறிப்பிட்ட நேரத்துக்குள்ள குறிப்பிட்ட செகண்டுக்குள்ள எந்த விஷயமா இருந்தாலும் செஞ்சா மட்டும்தான், இந்த தொழில்ல நீங்க முன்னுக்கு வர முடியும் .ஏன்னா ஏலம் அப்படிங்கறது நொடிக்கு நொடி மாறக்கூடியது .நீங்க கேட்டு முடிக்கிறதுக்குள்ள இன்னொருத்தவங்க இன்னொரு விலை கேட்பாங்க. அதனால சீக்கிரமா உங்களுடைய ஏலத்தை நீங்க கேட்கணும். ஒரு நொடி கூட சில பல மாற்றங்களை உருவாக்கும் ” என்று தொழில் நிறுவனத்தினர் சொல்ல, குழம்பிப் போயிருந்தார் காளீஸ்வரன் .

“நாம சரியான நேரத்தில தான போன் பண்ணினோம். இது எப்படி? நமக்கு இந்த பிராஜெக்ட் இல்லாம போச்சே ? இதுனால நமக்கு வர வேண்டிய நாப்பது கோடி ரூபாய் நஷ்டம் . இந்த ப்ராஜெக்ட் மட்டும் நமக்கு கிடைச்சிருந்தா நாப்பது கோடி ரூபாய் கிடைச்சிருக்கும். அந்த ஏழு செகண்ட்டால இவ்வளவு பணத்த இழந்து நிக்கிறோம். “

என்று மிகவும் வருத்தப்பட்டார் காளீஸ்வரன். ஆனால், அந்த ஏழு செகண்ட் எப்படி அவருக்குத் தெரியாமல் போனது? “சரியான நேரத்திற்கு தான போன் செய்தோம்? எப்படி அந்த ஏழு செகண்ட் நமக்குத் தெரியவில்லை” என்று குழம்பியே இருந்தார்.

” சரி , மறுமுறை சரியான நேரத்திற்கு நாம் போன் செய்ய வேண்டும்; இல்லை என்றால் அடுத்து வரக்கூடியது எதுவும் நமக்கு இல்லாமல் போய்விடும் ” என்று நினைத்தார் காளீஸ்வரன்.

” நாம் இழந்த அந்த ஏழு செகண்ட்டை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் “

என்று நினைத்துக் கொண்டு, தனக்குக் கிடைக்க வேண்டிய அந்த ஏலம் பறிபோனதை தன் நண்பனுக்கு தெரிவிப்பதற்காக போன் செய்தார். அப்போதுதான் காணாமல் அந்த ஏழு செகண்ட் அவருக்கு விளங்கியது.

” அடச்சே…. நாம சரியான நேரத்துக்கு தான் கால் பண்ணி இருக்கோம். ஆனா இதுதான் நம்முடைய ஏலத்தை கெடுத்து இருக்கு போல. இதெல்லாம் இவ்வளவு நேரத்துக்கு ஏன் போடுறாங்க? இதனால எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கு நமக்கு. இது அவங்களுக்குத் தெரியுமா? நம்ம மாதிரி எத்தன பேருக்கு எத்தன விதமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும்.இத போடுறதுனால தப்புப் பண்ற மனுசங்க திருந்த போறாங்களா? அரசாங்கத்தில பணத்தை வாங்கிட்டு ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் விளையாடுறாங்க “

என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார் காளீஸ்வரன்.

“அப்போது சைபர் குற்றங்களை பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் குடியைப் பற்றியும் இன்னும் பல சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் போனை ஆன் செய்தால், தொடர்பு கொள்வதற்கு முன்பாக ஒரு நிமிடத்திற்கு மேலாக இந்த விளம்பரங்கள் வருகிறதே ? இது எதற்கு ? அவசரத்திற்கு தான் நாம் செல்போனை பயன்படுத்துறோம் .அந்த அவசரமே இப்ப தாமதமா போய் சேருது. இந்த விளம்பரங்கள செல்போன் பேசும்போது வைக்க வேணாமே ? இந்த விளம்பரம் வர்ற நேரம் , அனாவசியமானது. சரியான நேரத்தில சரியான விஷயத்த சொல்ல முடியல. “

என்று நினைத்தார் காளீஸ்வரன்.அந்த விளம்பரம் முடிந்து காளீஸ்வரன் நண்பருக்குக் கனைக்ட் ஆனது. ஏலம் கை விட்டுப் போனதைச் சொன்னார்.

” சரி விடு காளீஸ்வரன், அடுத்த ஏலத்தில பாத்துக்கிரலாம்”

என்று தேற்றினார் நண்பர்.அதை கட் செய்து விட்டு, இன்னொரு நண்பருக்கு போன் செய்தார் .

“அதே விளம்பரம் மறுபடியும் வந்து கொண்டிருந்தது .

“ஐயோ இந்த விளம்பரத்த தடை செய்ய வேண்டுமே? “

என்று அலுத்துக் கொண்ட காளீஸ்வரன், அந்த அழைப்பைக் கட் செய்து விட்டு, மேலிடத்திற்கு புகார் செய்ய அவர்களுக்கு போன் செய்தார். அப்போதும் அந்த விளம்பரம் வந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் இது வெற்று விளம்பரம்…! இதனால் தான் இத்தனை பிரச்சினை என்பது காளீஸ்வரனுக்கு தெரிந்தது. எரிச்சலின் உச்சிக்குச் சென்றார் காளீஸ்வரன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *