திருவாரூர், ஜூலை 10–
திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை திருடி கடத்திச் சென்றவரை கைது செய்த போலீசார் 4 ஆடுகளையும் மீட்டு, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் இரவு ஆடுகளை வீட்டின் அருகே கட்டியுள்ளார்; காலையில் பார்த்தபோது கட்டப்பட்டிருந்த 4ஆடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஒருவர் கைது
இந்நிலையில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை, திருவோணம் பகுதியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆட்டின் உரிமையாளருடன் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது, காணாமல் போன 4 ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற ரெங்கராஜ் (வயது 50) என்பவரை எடையூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 4 ஆடுகள் மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து ஆடு திருட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.