விழுப்புரம், மார்ச் 4–
அமைச்சர் க.பொன்முடி, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், ச.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது:–
முதலமைச்சர், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, வேளாண்மைத்துறைக்கென்று தனிநிதிநிலை அறிக்கையினை வௌியிட்டு, பல்வேறு சிறப்புத்திட்டங்களை வேளாண்மை துறையில் செயல்படுத்தி விவசாயத்தினை காத்துவருவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காத்து வருகிறார்.
அந்த வகையில், பாசன ஆயக்கட்டுதாரர்கள் கலந்தாய்வு கூட்டம் 12.2.2025 அன்று நடத்தப்பட்டு வீடுர் அணையின் நீர் இருப்புக்கு ஏற்றவாறு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று வீடுர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், இன்றைய தினம் வீடுர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது.
திண்டிவனம் வட்டத்தில் வராகநதி மற்றும் தொண்டியாறு ஒன்று சேரும் இடத்தில் வீடூர் நிர்தேக்க திட்டம் அமைக்கும் பணி 1958-–ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959-–ம் ஆண்டு முடிக்கப்பட்டு தெடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.
வீடூர் அணையின் மொத்த நீளம் 4511 மீட்டர், உயரம் 32 அடி மற்றும் அணையின் கொள்ளளவு 605.00 மி.கன.அடி, வீடூர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2200 ஏக்கர் நிலமும், புதுவை மாநிலத்தில் 1000 ஏக்கர் நிலம் ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது.
இதன் மூலம் தமிழ்நாடு பாசன பகுதியான சிறுவை, வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் 2200 ஏக்கரும், புதுச்சேரி பகுதியில் 1000 ஏக்கரும் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவார்கள்.
பாசனத்திற்காக தண்ணீர் 3.3.2025 முதல் 15.7.2025 வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். இன்றைய தினத்தின் அடிப்படையில், வீடூர் அணையின் நீர்மட்டம் 31.075 அடி ஆகும். அணையின் கொள்ளளவு 532.570 மி.கன.அடி ஆகும்.
எனவே, பாசன நீரை சிக்கனமாகவும், துறை அலுவலர்களின் அறிவுரைப்படியும், சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, ஒன்றிய குழுத் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், வீடுர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுந்தரி தமிழரசன், வசந்தா, வட்டாட்சியர் சிவா, உதவி பொறியாளர்கள் மோகன்ராமன், சதீஷ் கண்ணன், இளநிலை பொறியாளர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.