சென்னை, அக். 19–
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் மீண்டும் ஆஜராகததால் வழக்கின் விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷ்க்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை, இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். விவகாரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வரியா ஆகியோர் இரண்டாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.