விழுப்புரம், டிச.21
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 29.11.2024 முதல் 3.12.2024 வரை பெய்த கனமழை (48 மணி நேரத்தில் 56 செ.மீ) மற்றும் அதனைத்தொடர்ந்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை தொடர்ந்து உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:-
பெஞ்ஜல் புயல் காரணமாக 329 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 22,690 பேர் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்தி தரப்பட்டது. அதுமட்டுமின்றி 13 சமுதாய உணவகங்கள் மூலம் 3,74,730 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதுதவிர 27,480 பால் பாக்கெட்டுகள், 6,920 பால் பவுடர்கள், 10,500 பிஸ்கட் மற்றும் பிரட் பாக்கெட்கள், போர்வைகள், பாய் ஆகியவை வழங்கப்பட்டது.
தீயணைப்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படைகளின் 1,030 வீரர்களை கொண்டு 8,913 பேர் மீட்கப்பட்டனர். 165 விலங்குகள் மீட்கப்பட்டது. மீட்பு பணிகளுக்காக 40 படகுகள் பயன்படுத்தப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலமாக வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த 17 பேரில் 15 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படும்.
அதிகனமழையின் காரணமாக இதுவரையில் இறந்துவிட்ட மற்றும் காணாமல்போன 259 கறவை மாடுகள், 14 எருதுகள், 245 கன்றுக்குட்டிகள், 911 ஆடுகள், 3 குதிரைகள், 2 எருமைகள் உள்ளிட்ட 1,432 கால்நடைகளின் 444 உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.56,78,000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.
மழையினால் 6,723 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5,053 வீடுகளுக்கு நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 கோடியே 5 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 4,83,889 குடும்ப அட்டைதாரர்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.96.78 கோடி நிவாரணத்தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தொகையுடன் குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பருப்பு ஆகியவற்றை கொண்ட தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக புயலால் பாதிக்கப்பட்ட 917 மாணவர்களுக்கு பள்ளி சீருடையும், பள்ளிக்கு எடுத்துச்செல்லும் புத்தகப்பையும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 34,966 புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுவின் மூலமாக புயலால் பாதிக்கப்பட்ட 169 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17.32 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக 1,155 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 73,663 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். மாவட்ட தொழில் மையம் மூலம், 524 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. அதேபோல் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் வெள்ளத்தால் மூழ்கிய பரப்பு 81,444.06 ஹெக்டேர் எனவும், 1,31,745 சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கணக்கிடப்பட்டு அதற்கான நிவாரணமாக ரூ.121.13 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டு நிலைப்பயிராக இருந்து வரும் பழமரங்கள், மலைப்பயிர்கள், சவுக்கு மற்றும் காய்கறிகள் போன்ற 19,253.83 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்டப்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் 27,451 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கள ஆய்வில் முடிவு செய்யப்பட்டு அதற்கான நிவாரணமாக ரூ.41.31 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு களை சரிசெய்திடும் பொருட்டு 10 துறைகளின் சார்பாக தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.106.78 கோடி நிதியும், நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1,863.52 கோடியும் நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.