சென்னை, பிப்.6-–
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி வெடிவிபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அருகே நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி (வயது 50) என்ற பெண் உடல் கருகி பலியானார். மேலும் அந்த அறையில் வேலை பார்த்த அதிவீரன்பட்டியை சேர்ந்த கஸ்தூரி, வீரலட்சுமி, மகாலட்சுமி, பொம்மையாபுரத்தை சேர்ந்த முருகேசுவரி, ஆவுடையாபுரத்தை சேர்ந்த மாணிக்கம், மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
வெடி வெடிவிபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-–
விருதுநகர் மாவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டை வட்டம், வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகேஸ்வரி (வயது 55), மாணிக்கம் (வயது 50), மகாலட்சுமி (வயது 48), வீரலட்சுமி (வயது 37), சைமன் டேனியல் (வயது 33), கஸ்தூரி (வயது 33) ஆகிய 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.