முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர், ஜூன் 11–
விருதுநகர் அருகே வடகரையில், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள். இந்த பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அண்மை காலமாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி அதிரடியாக ஆய்வு நடத்தி விதிகளை முறையாக பின்பற்றாத ஆலைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் காரியாபட்டி அருகே இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காரியாபட்டியை அடுத்த தண்டியனேந்தல், கல்குறிச்சி, காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு கிளைகளை கொண்டுள்ள இந்த ஆலை நாக்பூர் மாநில உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.குறிப்பாக இந்த ஆலையில் சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படுகிறது. இன்று காலை பட்டாசு ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் தண்டியனேந்தல், கல்குறிச்சியை சேர்ந்த 5 தொழிலாளர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் இருந்தனர். அப்போது அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.இதில் அந்த அறை அடையாளம் காண முடியாத அளவுக்கு இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு பணியில் இருந்த தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 35), கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (53) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காரியாபட்டி உள்ளிட்ட அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து மருந்துகள் வெடித்த வண்ணம் இருந்தன. பின்னர் அதிக வேகத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகே பலியானவர்களின் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டனர். மேலும் இந்த விபத்தில் பேச்சியம்மாள் (43), கணேசன் (53) மற்றும் முருகன் (45) மற்றும் மாரியம்மாள் (வயது 40) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தை அறிந்த அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின்
இரங்கல்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி சவுண்டம்மாள் (வயது 54) மற்றும் தண்டியனேந்தலைச் சேர்ந்த அய்யணன் என்பவரின் மகன் கருப்பையா (வயது 37) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன் (வயது 55), முருகன் (வயது 40), மாரியம்மாள் (வயது 40) மற்றும் பேச்சியம்மாள் (வயது 38) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.