‘குற்றச்சாட்டை சொல்லிவிட்டு ஓடி ஒளிவதா? நான் அப்படி ஓடி ஒளிய மாட்டேன்’
சென்னை, ஜன.11–
‘எதிர்க்கட்சி தலைவருக்கு (எடப்பாடி பழனிசாமி) பதில் சொல்ல நான் தயார்’’ என்று- முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார். ‘‘எந்தப் புகாரையும் பொத்தம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் பேசுங்கள்’’ என்று அறிவுறுத்திய ஸ்டாலின், அண்ணா தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன் என்று எடப்பாடிக்கு பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார். சாலிகிராமத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–
விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்குரிய விளக்கத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
அவர் குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும். அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும். அதனால்தான் நான் சொன்னேன்; நான் ஓடி, ஒளிய மாட்டேன், பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று சொன்னேன்.
31.-12.-2022 அன்று இரவு 10.-45 மணிக்கு பெண் காவலர் ஆர்-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனே எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4-ன்கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சிகளை காவல் ஆய்வாளர் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 3-.1-.2023 இரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் 4–ந் தேதி அன்று காலையே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். புகார் கொடுத்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 72 மணி நேரத்தில் அவர்களைக் கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற அந்தக் கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.
அலைகழித்த ஆட்சி தானே
அண்ணா தி.மு.க.
எஸ்.பி. அந்தஸ்த்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை, இதுமாதிரி புகாரில் அலைகழித்த ஆட்சிதானே அண்ணா தி.மு.க. ஆட்சி.
இந்த அரசைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், ஒட்டுமொத்தமாக, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறதென்று சொன்னார்.
* ராமநாதபுரம், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு விழாவில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் மரணம், யாருடைய ஆட்சியில்?
* தேவர் ஜெயந்தி விழாவில் மதுரையில் வெடிகுண்டு வீச்சு – – 4 பேர் மரணம்.
* சிவகங்கை, திருப்பாச்சேத்தி உதவி ஆய்வாளர் ஆன்வின் சுதன் படுகொலை 2012–ல் செய்யப்பட்டது.
* கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது…
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அண்ணா தி.மு.க. ஆட்சியில்தானே?
* கூடங்குளம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது, பொதுமக்கள் ஐ.ஜியை தரையில் இழுத்துச் சென்றது, அவரது கைத்துப்பாக்கி காணாமல் போனது.
பொள்ளாச்சி சம்பவம்
ஒன்று போதாதா?
* அண்ணா தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா?
* வன்னியர் சங்க மாநாட்டைத் தொடர்ந்து எழுந்த சட்டம் -ஒழுங்குப் பிரச்சனையில் நூறு வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைத்ததும் அண்ணா தி.மு.க. ஆட்சியில்தான்
* ஜல்லிக்கட்டு அனுமதிக்கு அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி, பொதுமக்கள் வாகனங்களை காவல் துறையினரே தீயிட்டு கொளுத்தியதும் அண்ணா தி.மு.க ஆட்சியில்தான்.
* சாத்தான்குளத்தில் லாக்கப் வன்முறை, காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் இல்லை, அண்ணா தி.மு.க ஆட்சியில்தான்.
இந்த ஆட்சியைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிய, அவருடைய குற்றச்சாட்டுக்கு இதையே பதிலாகதெரிவிக்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
சபாநாயகரிடம் எடப்பாடி கேள்வி
‘‘ஆளுங்கட்சி தரப்பில் அனுமதித்ததால் தான் பேச அனுமதிப்பீர்களா?’’ என சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், வேண்டுமென்றே திட்டமிட்டு பேச விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு, சபாநாயகரை குற்றம்சாட்டி பேசுவது கண்டிக்கத்தக்கது. நேரமில்லா நேரத்தில் கேள்வி எழுப்ப சபாநாயகரிடம் முன் அனுமதி பெறப்பட்டதா? நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சபாநாயகர் தனபாலிடம் முன் அனுமதி பெற்றுதான் கேள்வி எழுப்புவேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதியுங்கள், நான் பதில் சொல்ல தயார், ஓடி ஒளிய மாட்டேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.