கதைகள் சிறுகதை செய்திகள்

விட்டுக் கொடுத்தல்…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

இனி திருநாவுக்கரசுடன் பேசக்கூடாது .அவன் பெயர்தான் திருநாவுக்கரசு. ஆனா அவன் நாவு எப்போதும் தவறாவே பேசுது. எதை பேசினாலும் ஓட்டை பானையில நண்டு விட்ட மாதிரி பேசி இருக்கிறான். ரகசியம்ங்கிறது முற்றிலும் கிடையாது. இவனை நம்பி எதுவும் சொல்லக்கூடாது

என்று முடிவு செய்தான் பாலன்.

அதைத் தன் நண்பனான ராமநாதனிடமும் சொன்னான். முதலில் பிரச்சனையைக் கேட்ட ராமநாதன் தலையை மட்டும் ஆட்டினான். எந்த யோசனையும் சொல்லவில்லை.

சிறிது நேரம் பாலன் பேசியதை அமைதியாகக் கேட்ட பிறகு பேச ஆரம்பித்தான் ராமநாதன்

” என்ன பாலன் ரொம்ப கோவமா இருக்கீங்க போல? இங்க எதுவுமே நிரந்தரமல்ல வாழ்க்கை ரொம்ப அழகானது .பட்டாம்பூச்சி மாதிரி. வானவில் மாதிரி. நீர்த்துளி மாதிரி. போற போக்குல ரசிச்சிட்டு போகணும். பிக்சட் டெபாசிட் மாதிரி வைக்க கூடாது. உங்களுக்கு திருநாவுக்கரசு பிடிக்கலையா, அதை விட்டுருங்க அவ்வளவுதான் .கொஞ்ச நாளைக்கு பேசாம இருங்க. அவன் மேல இருக்கக்கூடிய பிரச்சனை உங்களுக்கு குறையும்.

யாருக்குத்தான் பிரச்சனை இல்ல? கட்டுன பொண்டாட்டி கூட புருஷனுக்கு சண்டை. புருஷன் பொண்டாட்டி கூட சண்ட. பெத்த பிள்ளைகள் தாய் தகப்பனைப் பார்க்கிறது இல்ல. உற்றார், உறவு சொந்த பந்தம் எல்லாமே பிரச்சனையில் தான் இருக்காங்க. இந்த வாழ்க்கை வண்டி இப்படித் தான் ஓடிட்டு இருக்கு. அதனால யாரையும் பகைச்சு நாம வாழ முடியாது, நேசித்து வாழணும். அதான் நல்லது .நீங்க திருநாவுக்கரசத் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. அவன் நல்ல மனிதன். உங்களை பற்றி கூட எனக்கு நிறைய சொல்லி இருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் கூட உங்களுக்கு என்ன பிரச்சனை பாலன் ? “

என்று கேட்டான் ராமநாதன் .

“இல்ல பாலன். அவன் எப்பவுமே தன்னப் பெருமைப்படுத்தி பேசுறான். அவனுக்குத்தான் அறிவு இருக்கு; அப்படின்னு நினைச்சுக்குறான். நாம ஏதாவது சொன்னோம்னா அதை வெளியில சொல்லி அசிங்கப்படுத்துறான். இப்படிப்பட்ட மனுஷன் கூட நமக்கு உறவு வேணுமா? அப்படின்னு நான் முடிவு செஞ்சுயிருக்கேன் ராமநாதன் “

என்று பாலன் சொல்ல

” அது தவறுங்க .மனிதனுடைய குணம் எப்பவும் மாறுபடக்கூடியது. நீங்க எந்த மனநிலையில திருநாவுக்கரசு கிட்ட பேசினீங்களோ எனக்கு தெரியாது. ஆனா பலாப்பழத்துக்கு மேல முள் இருக்கிறது மாதிரி ,எல்லா மனுஷங்களுக்குள்ளேயும் நிறை குறை இருக்கத்தான் செய்யும். அத ஆராய்ச்சி பண்ணனுனோம்னா வாழ்க்கை நடத்த முடியாது. அது அப்போ முடிஞ்சு போச்சு .அப்படின்னு நினைச்சு விட்டுட்டா இங்க எந்தப் பிரச்சினையும் இல்ல. நாளைக்கு வாங்க திருநாவுக்கரசு கூட பேசுங்க”

என்று கட்டளையிட்டான் ராமநாதன்.

என்ன பாலன் திருநாவுக்கரசு வந்திருக்கிறான் .வாங்க உட்காருங்க”

ராமநாதன் சொல்ல,

“வாங்க பாலன் சார் .எப்படி இருக்கீங்க குழந்தைங்க எப்படி இருக்காங்க?

என்று பாலனைப் பார்த்து திருநாவுக்கரசு கேட்க, அதுவரையில் திருநாவுக்கரசைக் தவறாக நினைத்துக் கொண்டிருந்த பாலனுக்கு என்னவோ போலானது. இவனுடன் எல்லாம் நாம் பேசக்கூடாது .நமக்கு இவன் தகுதியானவன் இல்லை “

என்று நினைத்துக் கொண்டிருந்த பாலனுக்கு திருநாவுக்கரசுவின் செயல் முதுகில் சுரீர் என்று அடித்தது போல் இருந்தது.

எதிரும் புதிருமாக இருந்த இரண்டு மனிதர்கள் இப்போது பேசிக் கொண்டார்கள் .சிரித்துக் கொண்டார்கள். கட்டிக்கொண்டார்கள். நிறைய பேசினார்கள் .

இதையெல்லாம் பார்த்த ராமநாதன் அவர்களிடம் வந்து

“பாத்தீங்களா மனசப் பூட்டி வைக்கிறதுனால தான் உள்ள என்ன இருக்குன்னு தெரியாமப் போகுது. மனசத் திறந்து வையுங்க. எல்லாமே பறந்து போயிரும் “

என்று சொன்னான், ராமநாதன். நடந்ததை எல்லாம் மறந்து விட்டு மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள் பாலனும் ,திருநாவுக்கரசும் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *