நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல்
டெல்லி, டிச. 18–
மோசடி செய்தவர்களின் ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என்றும் இதில் விஜய் மல்லையாவின் ரூ.14 ஆயிரம் கோடி சொத்துக்களும் அடக்கம் என்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில், “இதுவரை அமலாக்கத்துறை பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டுள்ளது. இதில் நாட்டை விட்டு ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் வைர வியாபாரி நீரவ் மோடியின் மோசடிகளும் அடக்கம்.
மல்லையாவின் ரூ.14,000 கோடி
விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.14,000 கோடியை அவர் கடன் வாங்கியிருந்த பல்வேறு வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதே மாதிரி நீரவ் மோடியின் சொத்துகளும் ரூ.1,053 கோடிக்கு விற்கப்பட்டு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து ரூ.13,000 கோடியை கடனாக பெற்றுவிட்டு நாட்டை விட்டு நீரவ் மோடியுடன் ஓடிய இன்னொரு வைர வியாபாரியான மெகுல் சோக்ஷியின் சொத்துகளை விற்கவும் அமலாக்கத்துறை மற்றும் வங்கி மும்பை சிறப்பு நீதிமன்றத்தை நாடியது.
அதற்கு, சிறப்பு நீதிமன்றம் மெகுல் சோக்ஷியின் ரூ.2,566 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலமிட்டு, அந்தத் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டாக முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது என்று கூறினார்.