திருநெல்வேலி, செப். 22–
திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று காலையில் அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர்.
திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று பணம் எடுப்பதற்காக ஏடிஎம் அறைக்குள் 2 பேர் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த காவலாளி வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தப்பிய கைதிகள்
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் மகன் சலீம் உசேன் (வயது 25), பாலுவால் பகுதியைச் சேர்ந்த அசன் மகன் முபட் (வயது 23) என்பது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திருடுபவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது இரண்டு பேரும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடினர்.
இதைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.