செய்திகள்

வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி: விரைவில் நடைமுறைக்கு வருகிறது

Makkal Kural Official

புதுடெல்லி, டிச.13-

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவர்களது மாத ஊதியத்தில் 12 சதவீதம் என்ற அளவில் நிர்வாகமும், தொழிலாளர்களும் பணம் செலுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் வருமானவரித்துறை ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தர கணக்கு எண்ணுக்கான மின்னணு வசதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதுபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் ‘பி.எப் 3.0’ என்ற பெயரில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி மாத ஊதியத்தில் இருந்து தொழிலாளர்களும், நிர்வாகமும் சரிசமமாக 12 சதவீதத்தை தற்போது பி.எப். கணக்கில் செலுத்தி வருகிறது. இதில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்சவரம்பை மட்டும் நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாதுகாப்பான, அதே நேரம் நிதிச்சந்தையில் நியாயமான வட்டி கிடைக்கக்கூடிய இ.பி.எப். தொகையை தொழிலாளர்கள் விரும்பினால் கூடுதலாக சேமிக்கலாம்.

தொழிலாளர்கள் 12 சதவீதத்துக்கு கூடுதலான தொகையை பி.எப். கணக்கில் சேமித்தாலும், நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் செலுத்த வேண்டிய விதிமுறையில் மாற்றம் இருக்காது.

மேலும் இ.பி.எப். கணக்குக்கு ‘டெபிட் கார்டு’ போல் அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பி.எப். பணத்தில் ஒரு பகுதியை திரும்பப் பெற விண்ணப்பித்து, ஒப்புதல் கிடைத்த பின்னர், ஏ.டி.எம். மூலம் தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

இந்த வசதி வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *