அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை, நவ.12-–
வணிகவரித்துறை வருவாய் 7 மாதங்களில் ரூ.79 ஆயிரத்து 772 கோடி கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.9 ஆயிரத்து 229 கோடி அதிகமாகும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
வணிகவரித்துறை இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வு கூட்டம், நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-–
வணிகவரித் துறையில் கடந்த 2023–-2024 நிதி ஆண்டின் முதல் 7 மாதங்கள் (ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை) ரூ.70 ஆயிரத்து 543 கோடி வருவாய் கிடைத்தது. இந்த 2024–-25–ம் நிதி ஆண்டில் 7 மாதங்கள் அக்டோபர் மாதம் வரை ரூ.79 ஆயிரத்து 772 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டு வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9 ஆயிரத்து 229 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
மேலும் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி இந்திய அளவில் 11.59 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி 19.39 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜெகநாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்காமூர்த்தி மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.