செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையம் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

Makkal Kural Official

சென்னை, பிப்.16–-

வடசென்னை அனல்மின் நிலையம் மூலம், தமிழகத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மின் உற்பத்தி மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், மின் உற்பத்தி இயக்குனர்கள் செந்தில்குமார், கருக்குவேல்ராஜன் மற்றும் தலைமை என்ஜினீயர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர், வடசென்னை அனல் மின் நிலையம் 1 மற்றும் 2-ல் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அனல்மின் நிலையங்களின் கொதிகலன் செயல்திறன், நீராவி சுழலி, கட்டுப்பாட்டு அறை, ஜெனரேட்டர், நிலக்கரி வருகை, நிலக்கரி சேமிப்பு கிடங்கு, நிலக்கரி கையாளும் விதம், கன்வேயர் அமைப்புகளின் செயல் திறன், உலர் சாம்பல் வெளியேற்றும் செயல்முறைகள் ஆகியவற்றை இந்த உயர்நிலை குழுவினர் கள ஆய்வு செய்தனர்.

மேலும், அனல் மின்நிலைய பாதுகாப்பு நெறிமுறைகள், சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அனல் மின் நிலையங்கள் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், மின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், தடையற்ற மின்சார வினியோகத்தை உறுதி செய்தல் போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலில், மின் உற்பத்தியில் தொடர் செயல் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய கருத்துகள் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வடசென்னை அனல்மின் நிலையங்கள் மூலமாக மாநிலத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரம் வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

உடன் வடசென்னை அனல் மின் நிலையம் நிலை தலைமைப் பொறியாளர்கள் முத்துக்கிருஷ்ணன், சண்முகசேதுபதி, மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *