தமிழகத்தில் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, டிச. 6–
வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. தமிழகத்தில் 11, 12ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை அடையும் என்றும் 12ம் தேதி வாக்கில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரும்.
தமிழகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
12ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.