சென்னை , அக். 6-
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை கோவளம் முதல் மெரினா வரை உள்ள கடற்கரை பகுதி முழுவதும் கண்டு களிக்கலாம் என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் விமான சாகசத்தை கண்டு ரசித்தனர். கடற்கரை பகுதிகளில் இருந்த வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றபடி பொதுமக்கள் அதிக அளவில் கண்டு களித்தனர்.
இதன் மூலம் 15 லட்சம் பேர் வரை இன்றைய விமான சாகசத்தை கண்டு ரசித்ததாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சாகச நிகழ்ச்சி லிம்கா விமான சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. மெரினாவில் திரண்ட மக்களை வானில் இருந்து சேட்டக் ஹெலிகாப்டர் புகைப்பட எடுத்தது.
மெரினா கடற்கரை சாலை பகுதி மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த 22 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடந்தது.
இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை சென்னை வான் சாகச நிகழ்ச்சி ஏற்படுத்தியது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி கடற்கரை முழுவதும் திரண்டிருந்ததை காண முடிந்தது. கடற்கரை மணற்பரப்பே தெரியாத அளவுக்கு மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
தங்களது செல்போன்களில் சாகச காட்சிகளை வீடியோக்களாகவும் படம் பிடித்தனர்.