தஞ்சாவூர், ஜூலை 10–
தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மினி லாரியும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் மினி லாரியை ஓட்டிய உரிமையாளரும் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் பி. ஆறுமுகம் (வயது 45). மினி லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர். இவர் தஞ்சாவூரில் இருந்து மினி லாரியில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
மினி லாரி டிரைவர், கிளீனர் பலி
தஞ்சாவூர் அருகே கண்டியூர் பகுதியில் சென்ற இந்த மினி லாரியும், அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகமும், அவருடன் பயணித்த திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்த டி. தமிழ்ச்செல்வனும் (வயது 50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.