சென்னை, மார்ச் 10–
ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்னும் சாதனையை படைத்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார். லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் 8–ந்தேதி அன்று தனது மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, ‘வேலியன்ட்’ சிம்பொனியை அரங்கேற்றினார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று பேசியதாவது:–
தனது வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆசிய கண்டத்துக்கே பெருமை சேர்த்து திரும்பியுள்ளார் இசைஞானி இளையராஜா. அவரை, தமிழக மக்கள் சார்பாக உரிய மரியாதையுடன் வரவேற்க நான் வந்துள்ளேன். மிகுந்த பெருமிதத்தோடு தமிழக மக்கள் சார்பில் நாம் அவரை வரவேற்கிறோம். நம் அனைவருக்கும் இளையராஜா ஒரு பெருமித அடையாளம்.” என்றார்.
விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் இளையராஜா கூறியதாவது:–
அனைவருக்கும் நன்றி. மிகவும் நன்றி.
மிகவும் மகிழ்வான இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு, நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல.
இசைக் குறிப்பை யார் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதி கொடுத்தால் அவர்கள் வாசிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் எப்படி இருக்கும். இப்படி நாம் எல்லோரும் பேசுற மாதிரி ஒருத்தருக்கும் புரியாத மாதிரி இருக்கும்.
ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு
சிம்பொனியை அரங்கேற்றம் போது எந்த விதி மீறலும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. சிம்பொனி நான்கு பகுதிகளை கொண்டது. அது முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள். கைதட்ட கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால் அதற்கு மாறாக ரசிகர்கள் ஒவ்வொரு பகுதி முடிந்த பின்னர் கைதட்டி ஆச்சரியப்படுத்தினர். ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் போது கண்டக்டர் மைக் என்னைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிப்பார்.
மேலும், சிம்பொனியின் 2வது பகுதியில் நான் இசையமைத்த சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அதில் ஒரு பாடலை நான் அவர்களோடு இணைந்து பாடினேன். எனக்கு இங்கே எனது இசைக்குழுவுடன் பாடியே பழக்கம். அவர்களோடு பாடி எனக்குப் பழக்கமில்லை. ஆனால் அவர்களோடு பாடினேன். அது மிகவும் கடினம். அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.
13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றம்
மொத்தத்தில் இந்த சிம்பொனி இசை வல்லுநர்கள் பாராட்டிய சிம்பொனியாகியுள்ளது. அது உங்களின் வாழ்த்து. இதை நான் அரங்கேற்றியது தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை.
முதல்வரின் அரசு மரியாதை என்னை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தி கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் தான். இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றப்பட உள்ளது. துபாய், பாரிஸ், ஜெர்மன் இப்படி பல நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடக்கப்போகிறது.
இந்தியாவிலும் அரங்கேற்றப்படும். அப்போது அமைதியாக இசையை ரசிக்கலாம். சிம்பொனியை யாரும் டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம்; ஏனென்றால் பயன்படுத்திய 80 வாத்தியக் கருவிகளின் இசையை உணர முடியாது. என் மீது மக்கள் அவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார்கள். என்னை தெய்வமாக கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். என்னை கடவுள், இசைக்கடவுள் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். என்னை இசைக்கடவுள் என்று சொல்லும் போது எனக்கு எந்த எண்ணம் தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்கள் என்று தான் தோன்றும்.
என்னை முன் உதாரணமாக
வைத்துக் கொள்ளுங்கள்
82 வயது ஆகியதால் இனிமேல் என்ன செய்ய போகிறார் என்று நினைக்காதீர்கள். நீங்கள் நினைக்கும் அளவுக்குள் நான் இல்லை. எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் இல்லை. பண்ணைப்புரத்தில் இருந்து புறப்படும் போதும் வெறும் கால்களோடு நான் நடந்தேன். என்னுடைய காலில் தான் நான் நடந்து, இந்த இடத்தில் வெறும் காலில் தான் நிற்கிறேன்.
இளைஞர்கள் உணர வேண்டும். இளைஞர்கள் என்னை முன் உதாரணமாக வைத்து கொண்டு அவர்களது துறையில் மென்மேலும் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய அறிவுரை. இவ்வாறு இளையராஜா பேசினார்.