சென்னை, அக்.9-
ரெயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக முன்பதிவு செய்ய வேண்டிய நடைமுறையே தற்போது உள்ளது. பயணத்திற்கு 12 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. நேரம் குறைய குறைய இந்த கட்டணம் அதிகரிக்கிறது. பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில் உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயண தேதியை மாற்றும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், பயண தேதியில் மாற்றம் செய்ய விரும்பினால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும். புதிய பயணத் தேதிக்கு மாற்றம் செய்யும்போது கட்டாயமாக இருக்கை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதேநேரத்தில், இருக்கை காலியாக இருந்தால் அதைப் பொறுத்து இருக்கை கிடைக்கும். மாற்றப்படும் தேதிக்கான ரெயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணங்கள் ஏதும் கிடையாது என மத்திய ரெயில்வே தகவல் தெரிவித்து உள்ளது.
![]()





