சென்னை, பிப் 1–
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 7 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12 ஆயிரத்து 202 கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23 ஆயிரத்து 234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 7132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,770 கோடி ரூபாய் செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதலமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.