சென்னை, ஜூலை 15–
படத் தயாரிப்புக்காக பெற்ற ஆறு கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப அளிக்கக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களை தயாரிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். முதல் படத்திற்கு ஊதியமாக பதினைந்து கோடி ரூபாய் பேசப்பட்டு ஆறு கோடி ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்த போது முன் பணத்தை திருப்பி கேட்டதாகவும் அப்போது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முன் பணத்தை திருப்பி அளிப்பதாக ரவி மோகன் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை திரும்ப கொடுக்காத நிலையில் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பை கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக ரூ.10 கோடி
தரவேண்டும்
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்களது நிறுவனம் அளித்த முன் பணத்தை ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்புக்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறினார். எனவே, ப்ரோ கோட் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டுமெனவும், வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடிக்க ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், ஆறு கோடி ரூபய்க்கான உத்தரவதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மை தான் எனவும் ஆனால் கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக கூடுதலாக பத்து கோடி ரூபாயை பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்க வேண்டுமென வாதிட்டார். இதனையடுத்து, மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
![]()





