டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு
சென்னை, அக்.16-
ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 1,000 மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,829 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக அரசுக்கு, திட்டங்களை நிறைவேற்றுவதில் டாஸ்மாக் வருமானம் கணிசமாக கைகொடுக்கிறது. அதனால்தான், டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வருபவர்கள் அதை நிறைவேற்றுவதில்லை.
இந்த நிலையில், கூடுதல் விலையில் மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டுவர ‘கியூ.ஆர். கோடு’ மூலம் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மதுப்பிரியர்களுக்கு தற்போது கூடுதல் வசதியாக, தினமும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகும் மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
இது தொடர்பாக, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* சராசரி விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் மதுபானக் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்க வேண்டும்.
* கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு மதுபானக்கடை பணியில் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யும் பொருட்டு மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட இளநிலை உதவியாளருக்கு ஜி.பி.எஸ். புகைப்படத்தை அனுப்பிவைக்க வேண்டும். மேற்படி கடைப்பணியில் இல்லாத கடை மேற்பார்வையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* மதுபானக் கடையின் கடை எண்ணுடன் கூடிய பெயர் பலகை மற்றும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
* அனைத்து விதமான பதிவேடுகளும் தினந்தோறும் பராமரிக்கப்பட வேண்டும்.
* கடையின் விற்பனையில் வெளிநபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடைப் பணியாளர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 4,829 கடைகளும் விற்பனையை பொறுத்து ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தினமும் ரூ.2 லட்சத்து மேல் விற்பனையாகும் ‘ஏ’ பிரிவு கடைகள் 1,000 இருக்கின்றன. இந்தக் கடைகளில்தான் 2 விற்பனை பிரிவுகள் தொடங்கப்பட இருக்கின்றன.