சென்னை, ஜன 25 –
பல் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனமாக இயங்கி வரும் ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 31-வது ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை மிகச்சிறப்பான முறையில் நடத்தியது.
இக்கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் இந்நிகழ்வில் தேர்ச்சி பெற்ற 106 பட்டப்படிப்பு மாணவர்கள், அவர்களது தேர்ச்சிக்கான அங்கீகாரமாக பட்டங்களை பெற்றனர். பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மனவ் ரச்னா சர்வதேச ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையத்தின் இணை வேந்தர் டாக்டர். புனீத் பத்ரா தலைமை விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மக்களவை உறுப்பினரும், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைக்கான முன்னாள் அமைச்சருமான எஸ்.ஜகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.
நிறுவனத்தின் தலைவர் ஜெ.ஸ்ரீநிஷா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் என். இளமாறன், பதிவாளர் டாக்டர். எஸ்.பூமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினர் புனீத் பத்ரா பேசுகையில், “இந்த மாணவர்களின் சாதனைகளை இன்று நாம் கொண்டாடுகிறபோது, பயிற்சி கிச்சைக்கான ஒளிமயமான எதிர்காலம் உருவாவதை காண்பதில் நான் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். தங்களது துறையில், ஒரு ஆழமான தாக்கத்தை உருவாக்குவதற்கு அவசியமான சிறந்த அறிவையும், திறனையும், மன உறுதியையும் இந்த இளம் நபர்கள் கொண்டிருக்கின்றனர். இந்த கற்றலையும், புத்தாக்க உத்திகளை கண்டறிவதையும் இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டுமென அவர்களை நான் ஊக்குவிக்கிறேன்.
தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடனும், கனிவுடனும் சிறப்பான சேவையாற்றுவார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கையாகும்” என்று கூறினார்.
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஜெ. ஸ்ரீநிஷா, பட்டம் பெற்ற பட்டதாரிகளை அவர்களது கல்வி சாதனைகளுக்காக பாராட்டினார். பிறரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஊக்கத்தோடு பாடுபட வேண்டுமென்று அவர்களை அவர் கேட்டுக்கொண்டார். தங்களுக்கும் மற்றும் இனி வரவிருக்கும் தலைமுறையினருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க இக்கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவையும், திறன்களையும் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இதன் டீன் டாக்டர். எம்.எஸ். கண்ணன் பேசுகையில், “எங்களது 31-வது பேட்ச் பட்டதாரிகள் குறித்து நான் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன். பல் மருத்துவத்தை சிறப்பாக கற்றுக் கொள்வதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பும், பேரார்வமும், பல் மருத்துவ துறையின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது. கல்வித் திட்டத்தை நிறைவு செய்து மருத்துவ சிகிச்சைக்கான இந்த உன்னத பயணத்தை அவர்கள் தொடங்குகின்ற வேளையில் மாபெரும் வெற்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்” என்றார்.