சென்னை, ஜன 16–
ரியல் எஸ்டேட் துறையில் தொழில் முனைவோர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அரசு பாதுகாப்பு வழங்க கோரி ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் அதிபர்கள் தலைவர் ஆ. ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரில் பள்ளிக்கரணையில் கீர்த்தி புரமோட்டர்ஸ் எனும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.கமலஹாசன் சமூக விரோதிகளால் அவரது அலுவலகத்தில் வைத்தே கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி, அவரது அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெரும்பாலான நில வணிகத்தில் (ரியல் எஸ்டேட் தொழிலில்) சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குண்டர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. யாருக்கு நிலங்களை விற்க வேண்டும் என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது தொடங்கி அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் பின்புலம் கொண்ட ஒரு சில குண்டர்களின் கையில் தான் உள்ளது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் நில உரிமையாளர்கள் மிரட்டப்படுவதுடன் கொலைவெறி தாக்குதலுக்கும் ஆளாகி, அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும், மேலும் அவர்களது சொத்துக்களை சேதப்படுத்துவது கபளீகரம் செய்வது, சூறையாடுவது, அபகரிப்பது போன்ற சம்பவங்களும், ரியல் எஸ்டேட் கொலைகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் மேற்கூறிய ஏ.கமலஹாசனுக்கு நடைபெற்ற இந்த கொலைவெறி தாக்குதலுக்கு முக்கிய காரணியாக விளங்குவது வீடு விற்பனை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினை தான்.
ஏ.கமலஹாசன் பெயிரா கூட்டமைப்பில் 7வது குழுவின் மாநில பொருளாளராக அங்கம் வகித்து வருகிறார் என்று அதில் ஆ. ஹென்றி தெரிவித்தார்.