மன அமைதி தேடி எங்காவது அமரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலுக்கு ஒரு பூங்காவில் தியான மண்டபம் தென்பட்டது .
அந்தப் பூங்காவைச் சுற்றி நிறைய மனிதர்கள் நடந்து கொண்டிருந்தார்கள் . நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
வேலுக்கு ஏதோ மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றுவதற்காக தியான மண்டபத்தில் போய் அமர்ந்தான் . இரு கண்களை மூடியபடி பிரச்சினைகளை எல்லாம் கண்கள் வழியாகவும் காதுகள் வழியாகவும் வெளியேற்றிவிட்டு புத்தியை நடு நெற்றியில் வைத்துக் கொண்டு பிரச்சனை என்னவாக இருக்கும்? எதற்காக நம் மனம் கலங்குகிறது? என்று அமைதியாக அமர்ந்தான்.
” வீட்டில் பிரச்சனை .அலுவலகத்தில் பிரச்சனை. நண்பருடன் பிரச்சனை. இப்படி பிரச்சனைகளாகவே அவன் வாழ்க்கை முழுவதும் இருந்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது எப்படி ? இதை நாம்தான் ஏற்றுக் கொள்கிறோமா? இல்லை நமக்குள் இவர்கள் திணிக்கிறார்களா ?”
என்று அவன் உள்மனதிலிட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, அந்த இடத்தில் சத்தமாக ரிங்டோன் அடித்தது.
“என்ன இது தியான மண்டபத்தில் சத்தமாக இருக்கிறது? கண்களைத் திறந்து பார்க்கவும் முடியாது. கண்களைத் திறந்தால் தியானம் கலைந்து விடும் .நம் விரதமும் விடுபட்டு விடும் .எப்படி இவர்களை விரட்டுவது?”
என்று யோசித்துக் கொண்டே தியானத்தில் இருந்தான் .
“காதல் வானிலே .. காதல் வானிலே “
ஒரு காதல் பாடலை ரிங்டோனாக ஒருவன் வைத்திருந்தான். மெல்லிய இசையை ஒரு பெண் வைத்திருந்தாள்.
அந்தப் பூங்காவே அலறும்படி ஒருவன் ரிங்டோன் வைத்திருந்தான்.
” என்ன இது இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? அவரவர்கள் வைத்திருக்கும் போன் அவர்களுக்குத்தானே கேட்க வேண்டும்? எதற்காக இவ்வளவு சத்தமாக வைத்திருக்கிறார்கள்? இவர்களுக்கெல்லாம் காது கேட்காதா? இல்லை செவிடா ? ஒன்று சத்தத்தை குறைத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் அதிரும் மோடில் வைக்க வேண்டும் .அதை விட்டுவிட்டு எட்டு ஊருக்கு கேட்பது போல் ரிங்டோன் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ? இவர்களெல்லாம் படித்தவர்கள் தானா ? இவர்களுக்கு அறிவு என்பது ஏதாவது இருக்கிறதா? எதற்கு இத்தனை பெரிய சத்தம் ?
என்று அத்தனை ரிங்டோன்களையும் காதில் வாங்கிக் கொண்டிருந்தவனுக்கு அவனின் தியானம் கலைந்தது . தியானமும் வேண்டாம் வரமும் வேண்டாம் . விரும்புவர்களை விரட்டி அடித்தால் போதும் . இதுவே பெரிய தியானம் என்று திரும்பி பார்த்தான் வேலு.
அவனவன் கையில் செல்போனை வைத்துக் கொண்டு அந்தத் தியான மண்டபத்தில் சல்லாபம் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள் .
“நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? இந்த இடம் எதற்காக எழுதப்பட்டிருக்கிறது? தியானம் செய்வதற்கு தானே ? நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு ரிங்டோன் அலற விடுகிறீர்கள். இது என்ன அந்தப்புரமா? இல்லை மடமா? உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கிறதா இல்லையா ? உங்களின் செல்போன் உங்களை உணர்த்துவதற்கு தானே சத்தம். அது எதற்கு இவ்வளவு சத்தத்தை வைத்திருக்கிறீர்கள்?”
என்று திட்டினான் வேலு.
” அவர் கேட்பது நியாயம் தாங்க . தியான மண்டபம்ங்கறது தியானம் பண்றதுக்கு தான் . இப்படி ஆளாளுக்கு உட்காந்து சத்தம் போடறது. செல்போனை வச்சுக்கிட்டு இங்கிதம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு இல்ல. மத்தவங்களுடைய உணர்வுகளை புண்படுத்துற இந்த மாதிரி ஆளுகளை விரட்டி அடிக்கணும் “
என்று வேலுவுக்கு ஆதரவாக பேசினார்கள்.
தியானம் செய்தால் கிடைக்கும் அமைதியை விட அவனைச் சுற்றி இருந்தவர்களை விரட்டியதால் வேலுவுக்கு பெரும் அமைதி கிடைத்தது .
” இந்த மனிதர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை. அருகில் இருப்பவரிடம் பேசினால் கூட சத்தமாக பேசுவது .தன் கையில் இருக்கும் செல்போன் தனக்குத்தான் கேட்க வேண்டும் என்றில்லாமல் ஊருக்கே சத்தம் கேட்டு அலற விடுவது. இது மனிதர்களின் அறிவற்ற செயலைக் காட்டுகிறது. இவர்களெல்லாம் எப்போதுதான் திருந்த போகிறார்களோ?”
ஒரு இடத்தை திருத்தி விட்டோம் இப்படி ஒவ்வொரு இடமும் திருந்தினால் மனிதர்களுக்கு உண்மையிலேயே அமைதி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அந்த தியான மண்டபத்தில் அமர்ந்தான் வேலு.
” நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே” என்ற பாடலை அலற விட்டு ஒருவன் தியான மண்டபத்திற்கு நுழைந்தான் :
” இவனால் பெரிய சண்டை வந்து ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை “
என்று அவன் பிடரியைப் பிடித்து வெளியே தள்ளினான், வேலு. “இது என்ன தியான மண்டபமா கச்சேரி பண்ற இடமா? உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? என்று வேலு சத்தமாகத் திட்ட அடுத்த நம்ம திட்டினாலும் திட்டுவான் போல என்று நினைத்து பூங்காவில் நடந்து கொண்டு இருந்த ஆட்கள், கூட தங்களது செல்போனை வைப்ரேஷன் மோடில் வைத்து நடக்க ஆரம்பித்தார்கள்.