ராமேஸ்வரம், மார்ச் 18–
ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்த வட மாநில பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டம் சிவாட்பாரி பகுதியைச் சேர்ந்த ராஜ்தாஸ் (வயது 59) என்ற சன்னியாசி பக்தர் ரூ.50 டிக்கெட் வாங்கி் வரிசையில் நின்றிருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருக்கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ராஜ் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருடன் உறவினர்கள் யாரும் வரவில்லை. தனியாகவே அவர் வந்தார் என கூறப்படுகிறது. இதனால் உடலை ஒப்படைக்க அவரது உறவினர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
நேற்று முன் தினம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் என்பவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.