ராமநாதபுரம், ஜன. 2–
ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மற்றும் அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருடன் மகள் அனீஸ் பாத்திமா (40), மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40), ஆயிஷா பேகம் (35) ஆகியோர் இருந்துள்ளனர்.
அப்போது மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வாலாந்தரவை அருகே ஆம்புலன்ஸ் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் லாரி ஒன்று டீசல் நிரப்பி விட்டு வெளியே வந்துள்ளது. இதில் லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வரிசை கனி, சகுபர் சாதிக், அனீஸ் பாத்திமா ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக ஆம்புலன்ஸின் பின்னால் வந்த ஆம்னி பேருந்து மற்றும் சொகுசு கார் ஆகியவையும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இதில் சொகுசு காரில் வந்த இருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றிய கேணிக்கரை போலீசார், உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மரைக்காயர் பட்டினம் கடற்கரை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.