சென்னை, ஜன 25–
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிறவியிலேயே காது கேளாதவருக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையில் பயன்பெற்ற குழந்தைகளின் ஆடல்–பாடல் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதோடு இணைந்து மாற்றுத்திறனாளி மேலண்மையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையர் சுதன் ராமசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இப்படிப்பட்ட நலிந்த மக்களோடு நெருங்கி பேசி அவர்களுடைய எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் இத்திட்ட செயல்பாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொண்டு அவர்களுக்கு திறன்களையும், ஆளுமைகளையும் வழங்க வேண்டும் என்றார். மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேவைகளை செயல்படுத்துமாறு கேட்பது அவர்களின் உரிமை, அதனை செயல்படுத்தும் வகையில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையையும், வேலையையும், வருமானத்தையும் கூடிய கண்ணியமான வாழ்வை அளிக்க வேண்டியது அரசு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் கடமையாகும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு எல்லோரையும் உள்ளிடக்கிய சமூக சேவைகள் திட்டத்தின் மாநில மேலாளர் பெஞ்சமின் விக்டர் மற்றும் மாற்றுத்திறனாளி மேம்பாட்டு ஆர்வலர் மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய கொள்கை மையத்தின் மூத்த அலுவலர் மீனாட்சி ராஜீவ் ரஞ்சன் மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளைப் பற்றி விளக்கினர்.
நிகழ்ச்சி துணை வேந்தர் டாக்டர் உமாசேகர் பேசுகையில், உலகத்தின் பல பிரபலமானவர்கள் தங்கள் உடல்நல குறைபாடுகளை மீறி செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே அப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை வழங்கினால் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என்றார்.