செய்திகள்

ராஜேந்திர சோழனின் வெற்றிப்பயணம், வணிகத் தொடர்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்

Makkal Kural Official

சென்னை, ஜன.6–

ராஜேந்திர சோழனின்‌ கடல்‌ கடந்த வெற்றிப்‌பயணம்‌ மற்றும்‌ அயல்நாட்டு வணிகத்‌ தொடர்புகளை நினைவுகூறும்‌ வகையில்‌, கங்கைகொண்ட சோழபுரத்தில்‌ அருங்காட்சியகம்‌ ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது எட்டு இடங்களில்‌ தொல்லியல்‌ அகழ்வாராய்ச்சிகளும்‌, கொற்கை துறைமுகப்‌ பகுதியில்‌ முன்கள ஆய்வும்‌ நடைபெற்று வருகின்றன.

இன்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம்‌, சர்வதேச அளவில்‌ பெரும்‌ பாராட்டுகளைப்‌ பெற்றதுடன்‌, இதுவரை, உலகெங்கும்‌ இருந்து 6 லட்சத்திற்கும்‌ மேலான பொதுமக்களும்‌ பார்‌வையிட்டு உள்ளனர்‌. இதனைத்‌ தொடர்ந்து, ஆதிச்சநல்லூர்‌, சிவகளை மற்றும்‌ கொற்கை ஆகிய இடங்களில்‌ மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக்‌ கொண்டு, திருநெல்வேலியில்‌ உலகத்‌ தரம்வாய்ந்த “பொருநை அருங்காட்சியகம்‌’ நிறுவுவதன்‌ மூலம்‌, தமிழ்ப்‌ பண்பாட்டின்‌ வளமான, காலத்தைக்‌ கடந்து நிற்கும்‌ பழம்பெருமையினை உலகிற்கு வெளிப்படுத்திட இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரியில்‌ கலைஞரால்‌ -பேரறிவின்‌ சிலையாக நிறுவப்பட்ட அய்யன்‌ திருவள்ளுவர்‌ சிலைக்கு

இந்த ஆண்டு வெள்ளிவிழா ஆண்டாகும்‌. இதை முன்னிட்டு, குமரி முனையில்‌ அமைந்துள்ள விவேகானந்தர்‌ பாறையையும்‌ திருவள்ளுவர்‌ சிலையையும்‌ இணைக்கும்‌ வகையில்‌, நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப்‌ பாலத்தை முதலமைச்சர்‌ திறந்து வைத்தார்‌.

நாட்டின்‌ பிற மாநிலங்கள்‌ மட்டுமன்றி, தெற்காசியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும்‌, தமிழ்நாட்டை உருவாக்கிட இந்த அரசு அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொள்ளும்‌.

இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *