நாமக்கல், ஜன. 16–
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. அண்ணா தி.மு.க. வை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 2006 வரையும் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்த நிலையில், தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு கட்சிப் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து விலகியிருந்த பிஆர்.சுந்தரம் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார்.
ஸ்டாலின் இரங்கல்
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில், “ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மறைந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வந்தவர் ஆவார். 2021ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் இயக்க நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.