திருப்பூர், ஜன. 5–
திருப்பூரில் கல்லூரி மாணவன் ‘ராக்கிங்’ கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. இவர்களது மகன் சத்யநாராயணன் (வயது 21) . கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் சத்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ஒரு மாணவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தொடர்ந்து மிரட்டுவதாகவும், வகுப்பறையில் வைத்து அடித்ததில் இருந்து தன்னால் தூங்க முடியவில்லை. இது குறித்து கல்லூரியில் புகார் தெரிவித்தால், வெளி ஆட்களை அழைத்து வந்து என்னை ஏதாவது செய்து விடுவார்களோ? என்று பயமாக உள்ளது. ஆகவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு வருகிறது என பதிவாகியிருந்தது.
எனவே சத்யநாராயணன் ‘ராக்கிங்’ காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 3 மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.