அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி, மார்ச் 24–
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மோடி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறி பிணையும் வழங்கியிருந்தது.
இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை வருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று காத்திருந்த போது இந்த செய்தியை அறிந்து உடனடியாக ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மேல்முறையீடு செய்வோம்
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோடி அரசு அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் போலீசை அனுப்புகிறது. அரசியல் பேச்சுகள் தொடர்பாக வழக்குகளைப் போடுகிறது. நாங்கள் மேல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.