கொல்கத்தா, ஜன. 27–
1947 ஆகஸ்ட் 18 ந்தேதியை நேதாஜி நினைவுநாள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதால், கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி 23 ந்தே்தி இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ஆகஸ்ட் 18,1947 என்றத் தேதியை மறைவுத் தேதியாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கொல்கத்தாவின் பவானிபூர் காவல்நிலையத்தில், பாரதிய இந்து மகாசபா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்திமீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.
ராகுல் மீது வழக்கு
இது தொடர்பாக, அகில பாரதிய இந்து மகாசபா மாநிலத் தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி, “நேதாஜியை முதலில் காங்கிரஸை விட்டு வெளியேறவும், பின்னர் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்திய அதே மரபை ராகுல் காந்தியும் சுமந்து வருகிறார். ராகுல் காந்தியும் அவரது மூதாதையர்களும், இந்திய மக்களின் நினைவிலிருந்து நேதாஜியின் நினைவுகளை அழிக்க முயற்சி செய்கிறார்கள். இந்திய மக்கள் அவர்களை தண்டிப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை, நேதாஜி பற்றிய தகவல்களை யாராவது சிதைக்க முயன்றால் நாங்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன. இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்குச் சென்று 1970-களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985-ல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
ஆனால் இதுவரை நேதாஜி காணாமல் போனது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட எந்த ஆணையமும், ஆகஸ்ட் 18, 1945 தேதியை அவரின் மறைவு தேதி எனக் குறிப்பிடவில்லை. மேலும், இதில் இருக்கும் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.