ரயில்வே துறை அறிவிப்பு
டெல்லி, ஜூன் 4–
ஒடிசாவில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து ‘கவசம்’ எனும் பொருள்படும் ‘கவச்’ தொழில்நுட்பம் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் விபத்துக்கு உள்ளாகி 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 2011–12 ஆம் ஆண்டிலேயே நான் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, விபத்துகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட டிசிஏஎஸ் (Traffic collision avoidance system) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாததே விபத்திற்கு காரணம்” என குற்றம் சாட்டியிருந்தார்.
ஓராண்டுக்குள் நிறைவேற்றம்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா, அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட டிசிஏஎஸ் என்ற தொழில்நுட்பமும், தற்போது உள்ள ‘கவசம்’ தொழில்நுட்பமும் வேறுவேறு என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட டிசிஏஎஸ் தொழில்நுட்பம் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்தால் மட்டுமே தானியங்கி பிரேக் பிடிக்கும் என தெரிவித்துள்ள அவர், சிவப்பு விளக்கு எச்சரிக்கையை மீறி ரயில் சென்றாலும் அதை டிடெக்ட் செய்து செயல்படும் விதத்தில் ‘கவசம்’ தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 2024ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளிலும் ‘கவசம்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.