செய்திகள் நாடும் நடப்பும்

ரயில்வே பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

Makkal Kural Official

தலையங்கம்


பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரெயில்வேக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதியாண்டின் ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து இந்த முறை 15-20% வரை அதிகரித்து ₹3 லட்சம் கோடியைக் கடக்கலாம் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்திய ரெயில்வேயின் நவீனமயமாக்கம், விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை உறுதிப்படுத்தும் இந்த அதிகப்படி நிதி ஒதுக்கீடு, நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு உந்துதல் சக்தியாக மாறும். பாதுகாப்பு மேம்படுத்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், நவீன ரயில்கள், செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் இணையம் கொண்ட செயல்திறன் (IoT) போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கி அதை உடனுக்குடன் செயல்பட வைக்கும் செயல்பாட்டையும் இந்தத் திட்டங்கள் நமக்கு தரவிருக்கிறது.

அதிவேக சேவைகள், நேரத்தில் செயல்படும் திறன் கொண்ட நவீன வந்தே பாரத் ரெயில்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த சொகுசான சவாரிகளுக்கு உறுதி தரும் வந்தே பாரத் ரெயில்கள் விமானப் பயணிகளை கூட ரெயில் பயணத்திற்கே இழுத்துக் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த ரெயில்கள் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைத்து சுற்றுலா மற்றும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி வருகிறது.

ரெயில் நிலையங்களின் மேம்படுத்தல், நவீன சேவைகள், மற்றும் பல முக்கிய தடங்களில் நெரிசலை குறைக்க அதிகப்படி சேவைகள் போன்றவை ரயில்வே துறையின் மறுசீரமைப்பின் துவக்கமாக அமையும்.

நகர்ப்புற ஜனதொகை அவசியத்தை உணர்ந்து மெட்ரோ நெட்வொர்க் விரிவாக்கத்தில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது. 1,000 கிலோமீட்டருக்கும் மேல் மெட்ரோ பாதை உருவாக்கப்பட்டு, 23 நகரங்களில் சேவை உருவாகி உள்ளது.

ரெயில்களில் கவச் (Kavach) போன்ற விபத்துக்களை தடுக்கும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் மற்றும் AI மற்றும் IoT போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் ரெயில்வே செயல்பாடுகளை கண்காணிப்பது, விபத்துகளை குறைக்கவும் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும்.

இந்திய ரெயில்வே, நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்களின் அன்றாட பயன்பாட்டில் முக்கிய பங்காற்றிக் கொண்டு இருப்பதை அறிவோம். மேலும் இத்துறை மிகப்பெரிய பணியாளர்களின் படை கொண்டு செயல்படும் வேலைவாய்ப்பு தளமாகவும் இருக்கிறது. ஆகவே இதன் நவீனமயமாக்கம் முக்கியமானது. அதிவேக ரெயில்கள், நவீன தொழில்நுட்பம் , அடிப்படை கட்டுமானம் அமைப்பதில் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட், இந்தியாவின் போக்குவரத்து அமைப்பை இளம்தலைமுறை தேவைகளை பூர்த்தி செய்யும் புரட்சிகளை உருவாக்கும் முதலீடுகளும் திட்டங்களும் அமல்படுத்தப்பட்டால் இது உலக அளவில் மாபெரும் வெற்றிச் சரித்திரமாக இருக்கும்.

#budget2025 #Railwaybudget #Nirmala Sitaraman #tamilnews #Makkalkural

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *