செய்திகள்

ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்

Makkal Kural Official

திருவள்ளூர், ஏப். 25–

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரெயிலை கவிழ்க்க சதியா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை–அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இன்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரெயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, சிக்னல் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் உள்ள ’எம்’பின் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகள் அகற்றப்பட்டிருப்பதை லைன்மேன் உரிய நேரத்தில் கண்டுபிடித்து, சிக்னலை கட் செய்துள்ளார். அந்த வழித்தடத்தில் அப்போது எவ்வித ரெயில்களும் இயக்கப்படாததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அரக்கோணம்–சென்னை மார்க்கத்தில் வரும் விரைவு ரெயில்கள், மின் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் தண்டவாள இணைப்புப் பகுதியில் போல்ட் நட்டுகளை அகற்றி ரெயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நான்சி வரவழைக்கப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் சென்றது. ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகற்றப்பட்ட’எம்’பின் போல்ட் நட்டுகளை பொருத்தி, தண்டவாளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டதால் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *