அழகிரியும் அவன் நண்பன் கோகுலும் இரவை நெருங்கும் சாயங்கால வேளையில் காேடம்பாக்கம் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள்.
சாலை என்று சொல்வதை விட கார், வண்டிகள் போற சந்து என்று சொல்லலாம் என்று அழகிரி நக்கல் அடிக்க
எஸ். அழகிரி, இப்ப எல்லாம் அகலமான பாதை எல்லாம் குறுகலாப் போச்சு குறுகலான பாதைகள் எல்லாம் இல்லாமல் போச்சு. சென்னை நகரத்தில் கேபிள் வயர் தோண்டுறது மெட்ரோ ரயில் போடுறது. குடிநீர் குழாய் இப்படி எத்தனையோ விஷயங்களுக்கு ரோட்டை வெட்டி போடுறாங்க. மக்களுக்காகத் தான் இதெல்லாம் செய்றாங்க. ஆனா இதனால் மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க என்று கோகுல் சொல்ல
ஆமா நீ சொல்றது கரெக்ட் முன்னை எல்லாம் தார் சாலை வழியாக நடந்து எழும்பூர் வரைக்கும் போயிரலாம். இப்போ எதுத்த ரோட்டுக்கு கூட போக முடியல . அவ்வளவும் அடச்சு வச்சு சுத்தி சுத்தி போக வைக்கிறாங்க என்று நொந்து சொன்னான் அழகிரி
இருவரும் அரசியல் சினிமா இலக்கியம் என்று அத்தனையும் பேசிய படியே வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு வயதான பெரியவர் தூரமாக வருவது தெரிந்தது. அவர் தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். சராசரியை விட சற்றுக் குறைவான உயரம் அவரைப் பார்த்தால் இவர் நம்மிடம் யாசகம் கேட்பார் என்று இருவருக்கும் அவர் அருகே வருவதற்குள் தெரிந்தது .
நேராக வந்தவர் இருவரையும் கையெடுத்து கும்பிட்டார். நமக்கு மரியாதை என்று கொடுத்து விட்டால் மரியாதை திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. அழகிரியும் கோகுலும் அந்த பெரியவருக்கு இரு கைகளை எடுத்து கும்பிட்டு திருப்பி மரியாதை கொடுத்தனர்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெரியவர் அவர்களிடம் யாசகம் கேட்டார்.
ஐயா சாப்பிட்டீங்களா? என்று அழகிரி கேட்க
சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு என்று கொஞ்சம் ஈனக்குரலில் சொன்னார் . அப்படியா ரெண்டு நாளா சாப்பிடாம என்ன பண்றீங்க? என்றபோது
கிடைக்கல என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார்.
அழுத்தம் திருத்தமான அந்தப் பதிலில் அவர் பொய் சொல்கிறார் என்பது இருவருக்கும் தெரிந்தது .
ஐயா உங்கள நான் நல்ல ஆசிரமத்தில் சேர்த்து விடட்டுமா? என்று அழகிரி கேட்டபோது
கடகடவென சிரித்த அந்த பெரியவர் என்னது ஆசிரமமா?அது சிரமம். அங்க தம்மடிக்க முடியாது. தண்ணி அடிக்க முடியாது. வெளிய அங்கஇங்க போக முடியாது. அங்க இருக்கிறதும் ஜெயிலில் இருக்கிறது ஒன்னுதான். அதுக்கு நான் செத்தே போகலாம் என்றார் அந்தப் பெரியவர்.
இப்போது அவரின் குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது.
என்னடா இது இவ்வளவு நேரம் வரைக்கும் ரெண்டு நாள் சாப்பிடல அப்படின்னு பசிக் கிறக்கத்துல பேசின மனுச இப்போ உக்கிரமா பேசுறாரே? என்று இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
அங்கே பழங்கள் விற்கும் ஒரு பெண்மணி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு அப்படின்னு சொன்னதும் நான் ஒரு நல்ல ஆசிரமத்துல சேர்த்து விடுறேன் அப்படின்னு கேட்டேன். ஆனா அதுக்கு அவர் என்ன சொல்றாரு பாத்தீங்களா? இப்படிப்பட்ட மனுசங்களுக்கு எல்லாம் யாசகம் கொடுக்கணுமா? என்று அழகிரி கேட்டான்.
நாம தம்பி இந்த காலத்து ஆள்கள். இந்த காலத்து ஆள்களில் யாரும் உண்மையா பிச்சை எடுக்கிறவங்க இல்ல. வயித்து பொழப்புக்கு பிச்சை எடுக்கிறது போயி , இப்போ வசதி வாய்ப்புகளோட பிச்சை எடுக்கிறவங்க இருக்காங்க. எல்லாம் பாணம் குடிக்கிறதுக்கும் கூத்தியா வச்சுக்கறதுக்கும் சொத்து சேர்க்கறதுக்கும் தான் தம்பி இப்ப எல்லாம் பிச்சை எடுக்குறாங்க. அதனால தான் நான் யாருக்கும் யாசகம் கொடுக்கிறது இல்லை என்று அந்த பெண்மணி சொன்னாள்.
இரண்டு பேரிடமும் திமிராகப் பேசிய அந்தப் பெரியவர் அவர்களை நிராகரித்து விட்டு நீண்ட தூரம் சென்று காெண்டிருந்தார் .
அடப்பாவி யாசகம் கேட்கிற ஆளுக்கு எவ்வளவு திமிரு அதுவும் முதியோர் இல்லத்தில் விட்டா தண்ணி அடிக்க முடியாது. தம்மடிக்க முடியாது .வெளிய சுத்த முடியாது. யாருக்காவது உதவி செய்யணும்னுனாலும் குணம் பார்த்து தான் யாசகம் போடணும் என்று முடிவு எடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் .
அவர்கள் பின்னாலே ஒருவர் யாசகம் கேட்டு வந்து கொண்டிருந்தார் .
திரும்பிப் பார்த்த இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.
தம்பி நான் யாசகம் எல்லாம் கேட்கல. அட்ரஸ்ஸ் கேக்க வந்தேன் என்று அந்த பெரியவர் மாற்றி சொல்ல ,
எங்களுக்கு அட்ரஸ் எல்லாம் தெரியாது. வேற ஆளுகிட்ட கேளுங்க என்று அழகிரியும் கோகுலும் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடினர்.