செய்திகள்

மொழி உணர்வு அரசியலுக்கானதல்ல ; அடிப்படையானது: அமைச்சர் பொன்முடி

Makkal Kural Official

சென்னை, செப். 24–

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, மொழி உணர்வு அரசியலுக்கானதல்ல அடிப்படையானது என்று கூறினார்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் “கவிஞர் தமிழ் ஒளியின் தமிழ்வெளி ஒர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா, மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழாக் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சென்னை பல்கலைக்கழக இலக்கியத் துறை சார்பாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் கவிஞர் தமிழ் ஒளியின் சிறுகதை தொகுப்பான “குருவிப்பட்டி” என்னும் நூலினை வெளியிட்டு சிறப்புரையில் பேசியதாவது:–

தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடத்த வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம். முதலில் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த கடலூர் மாவட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே என் கோரிக்கை. கலைஞர் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி, தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது என்பதே சிறப்பு.

அரசியலுக்கானதல்ல மொழி

கல்லூரிகளில் தமிழ்வழி கல்வியை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா. கலை பாடங்கள் மட்டுமின்றி அறிவியல் பாடங்களிலும் தமிழ் வழியில் படிக்கலாம் என கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு 500 வழங்கி ஊக்கப்படுத்தினார்.

1960 -களில் 500 ரூபாய் கொடுத்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள். பொறியியல் துறையில் உள்ள அனைத்து பாடங்களிலும் தமிழ் வழியில் படிக்க கொண்டு வந்தவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆங்கில வழியில் பயின்றாலும் தமிழில் தேர்வு எழுதலாம் என கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். தமிழ்நாடு முதலமைச்சர; ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரெக்கார்டிங் இல்லாமல் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும் என‌ ஆணையிட்டார்.

மொழி உணர்வு என்பது அரசியலுக்காக அல்ல; அது அடிப்படையான ஒன்று. அதை வளர்க்க வேண்டும் என்பதுதான் தமிழ் ஒளியின் நோக்கம். தமிழையும் தமிழ் உணர்வையும் வளர்க்க வேண்டும் என தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு விழாவில் நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *