சென்னை, பிப் 12–
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா கடந்த டிசம்பர் மாதம் 15ந் தேதி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகள் தொடங்கி வைத்தார். இதில் பல லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து கொண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி செலுத்தி வந்தனர். இதில் ஆன்மீக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் இருமுடி செலுத்தினார். இந்நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து தைப்பூச ஜோதி விழா நேற்று காலை மங்கல இசை முழங்க ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.
அன்னதானத்தை ஆன்மிக இயக்க தலைமை செயல் அதிகாரி அகத்தியன் தொடங்கி வைத்தார். அடுத்து ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மேலும் 4.30 மணி அளவில் தைப்பூச ஜோதி ஊர்வலத்தை துணைத் தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இதில் பாரம்பரிய கிராமீய நிகழ்ச்சிகளுடன் ஜோதி ஊர்வலமானது மேல்மருவத்தூரில் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பொறியியல் கல்லூரி மைதானத்தில் ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன், வருமானவரித் துறை துணை ஆணையர் நந்தகுமார், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தைப்பூச ஜோதியினை ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் அன்னதானத்தினை இயக்கத் துணைத் தலைவர் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க ஈரோடு மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் இயக்க பொறுப்பாளர்களும், பக்தர்களுக்கும் செய்திருந்தனர்.
தைப்பூச நாளில் சித்தர் பீடத்தில் விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் குருபீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவச் சிலைக்கும் ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி அகத்தியன், லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், டாக்டர்கள் மது மலர், பிரசன்ன வெங்கடேஷ், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்து வழிபட்டனர்.