மேலூர், ஜூலை 4–
மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக வருமாறு அழைத்துள்ளார்.
இதையடுத்து காதலனின் பேச்சை கேட்டு அவரும் இரவு நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளார். தீபன்ராஜ் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அருகில் உள்ள சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது தீபன்ராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து தீபன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் திருமாறன் (22), மதன் (20) ஆகியவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணுடன் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டு அங்கிருந்து தப்பினர்.தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து அந்த புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் காஞ்சனமாலா, மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தீபன்ராஜ், திருமாறன், மதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.