புதுடெல்லி, நவ.18-–
மேற்கு வங்காள கவர்னராக இருந்த ஜெக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், மேற்கு வங்காள கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்துக்கு புதிய கவர்னரை மத்திய அரசு நியமித்து உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்து.
கேரள பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
மத்தியில் ஆளும் மோடி அரசின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்த பணிக்குழுவின் தலைவராக இருந்தபோது, அனைவருக்கும் மலிவு விலையில் வீடு என்ற இவரது கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.