14 ரயில் சேவைகள் ரத்து
கொல்கத்தா, ஜூன் 25–
மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரக்பூர் – பாங்குரா – ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
14 ரெயில் சேவைகள் ரத்து
இவற்றை சரி செய்யும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளனது. எனினும் முழு ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி சேதங்களை சரி செய்ய 8 மணி நேரம் தேவைப்படும் எனவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பாங்குரா வழித்தடத்தில் இயக்கப்படும் 14 ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 3 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாகவும், 2 ரயில்கள் பாதி தூரத்துக்கு இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவப்பு சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதே ரயில் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மெயின் லைனில் செல்ல வேண்டிய சரக்கு ரயில், லூப் லைனில் சென்றதால், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது.