செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த பகுதிகளுக்கு செல்ல தடை

Makkal Kural Official

மேட்டூர், டிச. 22–

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல 3 நாள்களுக்குத் தடை விதித்து தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது பிரிவில் 1 அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 19-ம் தேதி மாலை முதல் பிரிவில் 3வது அலகில் உள்ள பங்கர் டாப் எனப்படும் நிலக்கரி சேமிப்புத் தொட்டி திடீரென உடைந்து விழுந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 42 மீட்டர் உயரத்தில் 3வது தளத்தில் இருந்த 165 டன் எடைகொண்ட பங்கர் டாப் 500 டன் நிலக்கரியுடன் விழுந்ததால் இரண்டாம் தளத்திலும், முதல் தளத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இயந்திரங்கள், மின் மோட்டார்கள், பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன. பங்கர் டாப் வழுவிழந்து விழுந்ததா அல்லது சதி வேலை காரணமாக விழுந்ததா என்பது இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இந்தப் பகுதியில் எப்போதும் தொழிலாளர்களும் கண்காணிப்பாளர்களும் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். விபத்து நடந்தபோது மாலையில் தேநீருக்கான நேரம் என்பதால் அங்கு குறைந்த அளவிலான தொழிலாளர்களே பணியில் இருந்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் உயிரிழப்பும், காயமும் குறைந்துள்ளது. இந்த பங்கர் டாப் விழுந்தபோது ஏற்பட்ட அதிர்வு காரணமாக வேறு பகுதியில் கட்டுமானம் வழுவிழந்துள்ளதா என்பது தெரியவில்லை. இதனால் 3 நாள்களுக்கு விபத்து நடந்த பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என்று தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வோரு அலகிற்கும் 6 பங்கர் டாப்கள் என மொத்தமுள்ள 4 அலகிற்கும் 24 பங்கர் டாப்கள் உள்ளன. இவற்றிலும் ஏதேனும் வழுவிழந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. நிலக்கரி அப்புறப்படுத்தும் போதும் உடைந்த பாகங்களை அப்புறப்படுத்தும்போதும் பராமரிப்புப் பணிகள் செய்யும் போது வலுவிழந்த பகுதிகள் தொழிலாளர்கள், பொறியாளர்கள் மீது விழக்கூடிய அபாயம் உள்ளதால் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான முழுமையாக காரணம் தெரிந்த பிறகு அங்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வீணானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *